Wednesday, October 31, 2012

கண்ணீர்!



சிரிக்க நினைக்கிறேன் மனம் அழுது சிதையுதே,
 வாழ துடிக்கிறேன் இதயம் துடிக்க மறுக்குதே,
கனவு முழுவதும் இந்த கணத்தில் நொறுங்குதே,
 உயிரில் பாதி என்னை புரிய மறந்ததே...

வேதனையடி கண்ணே வெந்து சாகிறேன்,
 பேதையடி பெண்ணே நொந்து அழுகிறேன்,
காதலடி நெஞ்சே நீ தீயில் எரித்தது,
 உணர்வடி உயிரே நீ உடைத்து சென்றது...

தேவனில்லை நான் உன்னை மறந்து மகிழ்ந்திட,
 விலங்கில்லை நான் புது உறவு தேடிட,
மானுடனடி உன்னை உயிராய் நேசித்தது,
 சடலமானதடி இன்று உன்னை யாசித்தது...

கூறுவதை கூறிவிட்டேன் இனி உன் விருப்பம்,
 கவிதையல்ல பெண்ணே இது கண்ணீரின் வாசகம்,
நிதமும் நீ விளையாடி மகிழ்ந்திட,
 இது விளையாட்டில்லை அமுதே வாழ்கை....

~அன்புடன் கோகுலன்.

Sunday, October 28, 2012

மனதின் மரணம்.


அன்பே உந்தன் குரல் ஏனோ,
 என் செவி அடைந்திட மறுத்திடுதே...
தனிமையில் இன்று தவிக்கும் நிலை,
 தினமும் முடிவின்றி நீடித்திடுதே...

உன்னை கண்டு நான் கண்விழித்தேன்,
 நினைவில்லை கனவென்று உணர்ந்தேனடி...
உண்மைகள் என் உணர்வுகளை வாட்டிட,
 இன்று விழிகள் திறந்திடும் போதே வலித்திடுதே...

என் இதயம் கண்ணீரில் நனைந்திடுதே,
 குருதி இன்றி அது இன்று துடித்திடுதே...
உள்ளமோ உன்னை தினம் தேடிடுதே,
 உயிரோ நீ இன்றி உருகிடுதே...

காதல் என்னும் பிறவித் துன்பம்,
 நீ இன்றி நானும் உணர்ந்தேன்...
மரணம் காண மதி விரும்பும் நிலையில்,
 நீ இல்லா ஒரு உலகம் இனி வேண்டாம் அன்பே!

~அன்புடன் கோகுலன்.

Tuesday, October 23, 2012

ஏங்குகிறேனடி!


இதயத்துள் உன்னை சுமந்துகொண்டு,
 தொலைத்தூரமும் நான் கடந்துவிட்டேன்,
இதழ்களோ மௌனித்துப் போனது அன்பே,
 உன் குரலை கேட்டிடவே என் செவிகளும் ஏங்குது இங்கே!

வீசும் காற்றில் உன் சுவாசத்தை மட்டும் தனியாய் நுகர்ந்தேன்,
 உன் தடத்தில் என் கால் பதித்தே தினமும் நடந்தேன்,
சிந்தும் மணியாய் சிதறும் உன் சிரிப்பை கொஞ்சம் ரசித்தேன்,
 உன் பார்வையில் வீழ்ந்து மடிந்திடவே இன்று வாழ்கிறேன்...

உன் உடலுக்குள் உயிராய் வாழும் வரமொன்று கேட்கிறேன்,
 தூரத்தில் விலகியிருந்தும் உன் நினைவுகளால் சிரிக்கிறேன்,
உன் குரல் இல்லா நாட்களில் சிதைந்தே மடிகிறேன்,
 உனக்காய் வாழ்வதை எண்ணி மறுபடிப் பிறக்கிறேன்...

நீண்ட நாட்களும், நிம்மதியில்லா உறக்கங்களும்,
 என் மனதை சிறைக்குள் அடைக்குதம்மா...
உன் நினைவுகளும், உன்னை காணும் கனவுகளும்,
 என்னை சிறகடித்துப் பறந்திடவேச் செய்யுதம்மா!

~அன்புடன் கோகுலன்.

Saturday, October 20, 2012

மனதில் கொஞ்சம் ஈரம்..



நிதமும் உன்னால் என் விழிகள் காணும் ஈரம்,
 தினமும் விடியலை கண்டதும் மறைந்திட கூடும்,
எனினும் உன்னால் என் மனதில் உண்டான காயம்,
 என் உயிர் பிரியும் போதிலும் அழியாதம்மா...

நினைவுகள் இனிமையானவை தான் கண்ணே,
 ஏனடி என் மனம் மட்டும் அழுகிறது?
கனவுகள் சுகமானவை தான் அன்பே,
 ஏனடி என் உயிர் மட்டும் உறைகிறது?

கண்கள் மூடினால் உன் முகம்,
 இமைகளுக்குள் செருகிய தூசியாய் உறுத்துகிறதே...
சிந்தனைக்குள் உன் உருவம்,
 என் உறக்கங்களையும் இன்று பறித்ததுவே...

மௌனங்களுக்கு என் வார்த்தைகள் அடங்குதடி,
 நிலவுக்கும் என் மனம் இன்று மயங்குதடி,
ஆனால் நீ இன்றி என் மனம் மட்டும்,
 காதலுக்குள் சிக்கித்  தனியாக தவிக்குதம்மா..

~அன்புடன் கோகுலன்.

Monday, October 15, 2012

செம்மொழி!


நினைவுகள் சிதைந்தது மனம் நிமிர்ந்து நின்றது,
 கனவுகள் கலைந்தது புது கற்பனைகள் பிறந்தது,
வித்திட்ட விதைகளும் இன்று விண்ணுக்கு படர்ந்தது,
 வேதனையின் வேர்களும் கூட கருகியே அழிந்தது...

உணர்வுக்கு உயிரூட்டி உடலினை மெருகூட்டி,
 மனமது தலைதூக்கி தலைக்கனம் வெறுத்தொதுக்கி,
விளையாட்டாய் ஓடிய மனமது,
 அர்த்தங்களை தேடிட தொடங்கியது...

கணப்பொழுதில் புது கவிதைகளும்,
 கடலலையாய் நிதம் திரண்டிடவே,
கலைமகளுக்கு சிரந் தாழ்த்திய என் வரிகளும்,
 தமிழ் அமுதை அழகாய் வார்த்தெடுத்தது...

அன்று சுடுப்பட்ட நெஞ்சம் தினமும் புண்பட்டதும் கொஞ்சம்,
 இன்று நான் செதுக்கிடும் வரிகளை இசை மெட்டுகளும் கொஞ்சும்,
மடைதிறந்த நதியலையாய் இனி என் வரிகளும்,
 எல்லை இன்றியே எட்டுத்திக்கும் ஓடும்....!

~அன்புடன் கோகுலன்.

Saturday, October 6, 2012

உந்தன் நினைவுகள்...


மனமது கடலலைபோல் கரைமீது அலைமோதுதே,
 கனவது உன் நினைவுகளால் தினமது நிறைந்ததுவே,
ஞாபகத்தில் கதவுகள் இன்று மறுபடி திறந்ததுவே,
 சிந்தனைகளால் இதயமும் நிதம் சித்தரவதை பட்டிடுதே...

காதல் எனும் பட்டாம்பூச்சி மீண்டும் என்னுள் குடிப்புகுந்ததே,
 நேரங்கள் மறந்து பாதைகள் தொலைத்து அலையசெய்ததே,
மரணத்தின் விளிம்பையும் எட்டிப் பார்த்திடும் ஆசை வந்ததே,
 உன் நினைவுகளால் சிறை பட்டிருப்பதையே உயிர் தினம் விரும்புதே...

தேகம் தினம் மெலிவதை மனம் ஏற்க மறுக்குது,
 கதவுகள் திறந்திருந்தும் கால்கள் வெளியேறுவதை தவிர்க்குது,
உன் ஓர் பார்வையால் பூத்த காதலடிப் பெண்ணே,
 உனக்காய் வாழ்வதையே என் உயிர் விரும்பிடுது...

பிரிவின் வலி எனும் கொடுமையை முதல்முறை உணரவைத்தாய்,
 தினமும் நொடி முழுதும் உன்னை மட்டும் நினைக்கவைத்தாய்,
வானவில்லின் நிறங்களுக்குள் என்னை வசிக்கவைத்தாய்,
 உனக்காய் அலைமோதிய உயிரையும் இன்று அழகாய் கொய்து சென்றாய்...

~அன்புடன் கோகுலன்.