Wednesday, November 21, 2012

வரம் வேண்டும்


 இரவு முழுதும் நான் விழித்திட வெண்ணிலவும் உதித்திடுமோ?
 கண் இமைகளை வருடும் காற்றும் கதைகள் பல கூறிடுமோ?
உணர்வை வாட்டிடும் காதலும் உயிரை உறையச் செய்திடுமோ?
 என் மௌனத்தை சிதறச் செய்த உன் குரல் இன்று மந்திரமாகிடுமோ?

உன் விரல் தொட்டு இடை பிடித்து முத்தமிட ஆசைதான்,
 கண் திறந்திருந்து கனவுகளை பருகிட ஆசைதான்,
என் மனம் விற்று உன் காதலை வாங்கிட ஆசைதான்,
 மண் உலகம் விட்டு விண்ணுலகம் பறந்திட ஆசைதான்...

மகரந்தம் கூடிய மலர்களாய் மாறி,
 உன் கூந்தலுக்குள் மணந்திட வேண்டும்...
மலர்கள் கூடிய மலர்மாலைகள் சூடி,
 உன் கரம்பற்றி மணந்திடும் நாளும் வேண்டும்...

காலம் மாறிடும் கவலைகள் விரைந்தோடும்,
 விழிகளின் ஈரமும் விடைகண்டு அகன்றிடும,
என் தேகமும் உன் மடியில் சரணடையும்,
 நம் உயிரும் ஓர் உணர்வால் இணைந்திடும்...

~அன்புடன் உன் கோகுலன்.

Friday, November 16, 2012

கலங்கரையே.. களைந்ததுவே...


காதலே என் காதிலே உன் காதலை நீ சொல்லிவிடு...
 பூவாசமே என் சுவாசமே உயிர் காதலை நீ கிள்ளிவிடு..
தென்றலே என் நெஞ்சிலே உன் நினைவுகளை நீ உருக்கிவிடு..
 மாலையில் ஒரு மாலையாய் உன் மார்புக்குள் எனை ஒளித்துவிடு..

காதலின் மடமைக்குள் மூழ்கி மடிந்தேன்,
 கடவுளின் பெயரையும் உணர மறுத்தேன்,
காவியமாய் புது கவிதை வடித்தேன்,
 கானகத்துள் கண் இழந்து தவித்தேன்...

மரங்கொத்தியே மனதை கொத்தி விட்டாய்,
 துளை இட்டதும் தூரத்தில் மறைந்து விட்டாய்,
காலம் ஓடுது கவலையும் கூடுது,
 கலங்கரையாய் இருந்தவள் களைந்து விட்டாள் ...

என் மாதங்கள் உன் நாதத்தால் நிறைகிறது,
 விடை தேடிட விடுகதைகள் மறுத்திடுது,
காற்றிலே உன் வாசமும் இன்று,
 என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று அழிக்கிறது...

~அன்புடன் கோகுலன்.

Wednesday, November 14, 2012

உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...


பார்ப்பவரை சிலையாக்கிடும் உந்தன் கண்கள்,
தென்றலையும் வருடிடும் உந்தன் கூந்தல்,
ஒரு கணம் ருசி பார்க்க தூண்டும் உந்தன் இதழ்களையும்,
மறக்காது எந்தன் நெஞ்சம்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

புல்லின் நுனியில் தவழ்ந்திடும் உந்தன் கால்கள்,
பஞ்சில் நெய்தது போன்ற உந்தன் கைகள்,
பளிங்கில் வார்த்தது போன்ற உந்தன் மேனியையும்,
விட்டு விலகாதடி எந்தன் நிழழும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

பேசாமல் எரித்திடும் உந்தன் கோபம்,
உன் வார்த்தைக்காக ஏங்கிடச்செய்யும் உந்தன் மௌனம்,
பயத்துள் மூழ்கிக்கிடக்கும் உந்தன் மதியையும்,
வெறுக்கிறேன் நான் தினமும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

என் கனவுகளை நிரப்பிடும் உந்தன் நினைவுகளையும்,
என் கண்களை கலங்கிடச்செய்யும் உந்தன் வார்த்தைகளையும்,
என்னை நான் வெறுத்திடச் செய்த நம் காதலாலும்,
தவிக்கிறேன் ஒவ்வொரு நொடியும்,
உயிருள்ளவரை... உணர்வுள்ளவரை...

~அன்புடன் கோகுலன்.

Sunday, November 11, 2012

என்னை கொய்தவள்!


மின்னல் பாய்ந்து தென்றல் தோய்த்து மங்கை ஆனவள்,
 கண்கள் கோர்த்து நெஞ்சம் பார்த்து காதல் சேர்த்தவள்,
மனதுள் பூத்து மோகம் வார்த்து கவிதை தந்தவள்,
 விழிக்குள் விழுந்து உணர்வுகள் கொய்து என்னை வாட்டியவள்...

மெல்ல சிரித்து கொள்ளை கொண்டாள்,
 முகத்தை முத்தங்களால் ஈரம் செய்தாள்,
கைகளுக்குள் உடலை சேர்த்துக் கொண்டாள்,
 சிரிப்பால் எனையும் கைது செய்தாள்...

மூளையை திருகி மனதை பிழிந்தாள்...
 வானவில்லை குடையாய் வானத்தையும் கூரையாக்கினாள்,
நினைவுகளில் சிக்கி கனவுகளில் தவிக்கவிட்டாள்,
 அவள் குரல் கேட்டு மனதையும் இளகச் செய்தாள்...

புன்னகை பூவாய் என் உள்ளமெங்கும் பூத்தவள்,
 ஓவியங்களாய் அவள் கண்கள் வரைந்திடச் செய்தவள்,
கடமைகளை மறந்து கவிதைகளை மந்திரமாக்கியவள்,
 உணர்வுகள் இழந்து அவள் உறவுக்காக தவித்திடச் செய்தவள்...

~அன்புடன்  கோகுலன்.

Thursday, November 8, 2012

பிரிவு


மாடி-1                                                                                                                      படி-2


வாழ்கை ஒரு நாடக மேடை, வாழ்கை ஒரு சக்கரம் என பலர் பலவாறு கூறுவதை தினமும் கேட்டு வளர்கிறோம். இதற்கு புதிதாக ஓர் அர்த்தத்தை வழங்க முடிவு செய்து விழிகள் புத்தகங்கள் சிலவற்றை ஊடுறுவத் தொடங்கியது. பல மணிநேர முயற்சிக்கு பின்பு தெளிவாக ஒன்று மட்டும் விளங்கியது, அர்த்தம் தேடிட இது ஒன்றும் ஆங்கில புத்தகத்தில் நான் வாசித்த இலக்கிய சொல் அல்ல என்பது. உண்மைதான் வாழ்கையை நாம் வாழ்ந்து தான் அர்த்தம் தேடிட முடியுமே தவிர, ஆராய்ச்சியால் அல்ல.

 ஏன் இவன் திடீர் என்று வாழ்கையை பற்றி அலட்டிக் கொண்டு இருக்கிறான் என நீங்கள் என்ன கூடும். ரசித்து வாசிக்கும் வாசகனுக்கு அது இரண்டாம் வசனம் வாசிக்கும் போதே என்ன கூறப் போகிறேன் என அவனுக்கு விளங்கி இருக்கும், "உண்மைதானே?"-விளங்கியவரிடம், சரி உங்களுக்கு இனி சொல்கிறேன்,எல்லாவற்றுக்கும் ஒரு முகப்பு அவசியம் அல்லவா? அதுதான்."சம்பந்தம் இல்லாமல் குழப்புகிறானே..." என என்ன வேண்டாம் சம்பந்தமுண்டு கட்டுரைக்கு இது அவசியம் .

வாழ்கையில் நாம் இன்பம், துன்பம், தவிப்பு, சலனம், நிம்மதி, தடங்கல், நிறைவு,காதல் போன்ற பலவற்றை சந்தித்திருக்கிறோம் அதில் முக்கியமான ஒரு பகுதி எனக்கு, நான் இங்கு கூறப்போவது, சிலருக்கு அது அவர்கள் கடந்து வந்த பாதையை பொருத்தது.அனுபவசாலிகள் அப்படித்தான் என்னவென்று யோசிக்காதிர்கள் தலைப்பை பற்றித்தான் கூறுகிறேன், "பிரிவு" அனுபவசாலிகளுக்கு ஆயிரத்தில் ஒன்று, என் போல் சாதரணமானவனுக்கு அனுபவத்துக்கு ஒன்று...

 ஏன் இன்று பிரிவைப் பற்றி பேசுகிறான் என நீங்கள் என்னக்கூடும். இது ஒரு பொது விடயம் ஆனால் மனதளவில் பலரையும் பாதிப்படையச்செய்யும்  நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்கக் கூடும் இப்பொழுது, சரி பொதுவாக அலசி, துவைத்து, காயவைக்கும் அளவுக்கு எனக்கு அனுபவமில்லை ஆகவே நான் சந்தித்த பிரிவுகளின்/பிரிவின் தொகுப்பைத் தருகிறேன். தொகுப்பு என்று கூறிவிட்டு அதிகளவில் அடுக்கி விடப்போவதில்லை.ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை அல்லது ஒரு நிகழ்வை பற்றி மட்டுமே எழுதப்போகிறேன், பார்ப்போம் எவ்வளவு முடியும் என்று அது என் நினைவுகளைப் பொறுத்தது...

 வாழ்நாளில் நான் பல பிரிவுகளைச் சந்தித்திருப்பினும் கூட மனம் எதிலும் சலனம் அடைந்ததில்லை எதிலும் பெரிதாக காயப்பட்டதில்லை.பிரிவில் என்னை மிகவும் பாதித்தது ஒரே விடயம் தான் அது  என் அம்மம்மாவின் இறப்பு தாயின் ஸ்தானத்தில் இருந்து என்னை நேசித்து வளர்த்தவர்,இந்த உலகில் நான் அதிகளவில் நேசித்த மனிதரில் ஒருவர் அதிலும் என்னை மிகவும் நேசித்த மனிதரில் ஒருவர். அம்மாவை விடவா? என நீங்கள் என்ன கூடும், அம்மா என்னை நேசிப்பதை போல தம்பியையும் நேசிக்க வேண்டும் நாங்கள் இருவரும் அவரின் இரு கண்கள் ஆனால் என் அம்மம்மாவுக்கு எத்தனை பேரன்,பேத்திமார் இருப்பினும் எனக்கு காட்டிய அளவுக்கு யாருக்கும் பாசத்தை காட்டவில்லை என்றே கூறலாம்.

அவரை பற்றி நினைக்கும் போதே கண்கள் கலங்குகிறது கண்ணீரால் நிரம்புகிறது,கவலை! மனதில் ஆழமாக ஏற்பட்ட காயம் "அழுதுவிட்டேன்". அடிக்கடி அவர் நினைப்பு என்னை கண்கலங்க வைத்துவிடும்,பிரிவின் வேதனையை நான் உணர்ந்த முதல் தருணம். புவிஅதிர்ச்சியை என் உள்ளம் உணர்ந்தத்  தருணம், அவரின் ஆத்மா ஆழ்ந்த உறக்கத்தை தழுவிய அந்த நொடி.இறந்துவிட்டார், என்னைப்  பிரிந்து சென்றுவிட்டார் என்பதை மனம் இன்னும் ஏற்க மறுக்கிறது.எங்கோ என்னைப்  பார்த்துக்  கொண்டு இருக்கிறார், எனக்காக காத்துக் கொண்டுயிருக்கிறார் எனும் எண்ணம் என்னைச் சுற்றி தினமும் ஓடுகிறது.

ஏன் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என சிலர் கேட்கலாம்,மறந்தால் தானே அதை மறுபடி நினைக்க என் மனம் கேள்வி கேட்பவருக்கு தரும் பதில். என் மனம் படும் அவஸ்தையை நான் யாரிடமும் சொல்லவில்லை காரணம் அதை கேட்க பெரும்பாலும் எவரும் விரும்பவில்லை.ஆயினும் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இறுக்கம் கொண்டு தவிப்பதை விட இங்கு கொட்டிவிடுவது சற்று மனதை இலகுவாக்கும். பிரிவுகளின் வேதனை பலருக்கும் உண்டு ஆனால் கண் முன்னே அவர் பிரிந்துச்சென்ற அந்த நொடி நான் உடைந்ததை இன்றும் மறந்திட முடியவில்லை, நிம்மதியான உறக்கம் தான், உறக்கத்திலேயே ஏற்பட்ட மரணம் எவருக்கும் அந்த பாக்கியம் இலகுவாக கிடைத்து விடுவதில்லை கேட்பவருக்கு நான் சொன்ன பதில்..., அனால் "அம்மா! என்னை தனியாக விட்டுவிட்டாயே!உன் மகனை பார்த்துக்கொள்ள இனி யார் இருக்கிறார்கள்?" என எண்ணிப் பார்க்கும் முன்பே என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

வருடக்கணக்கில் பக்குவமாய் செதுக்கிய சிலை ஒரு நொடியில் சிதையும் போது அதை செதுக்கிய சிற்பியின் நிலை தான், அன்று நான் உணர்ந்தது. குளிர்ச்சியை விரும்பாத உடல் குளிர்ந்துப் போனது,என் தலையை மிருதுவாய் தடவும் விரல்கள் விரைத்துப் போனது, எனக்காய் ஓடித் திரிந்தக் கால்கள் நின்றுவிட்டது. எனை பாசத்துடன் பார்த்திருக்கும் அந்த விழிகள் மங்கிவிட்டது, "அப்பா,மகனே" என அழைத்த அந்தக் குரல் இனி கேட்க்காது. இதுதான் உலக நியதியா? இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையா? கத்தி அழுது உருண்டு வீழ்ந்தேன், துடிதுடித்தேன், உடல் நடுக்கம் கொண்டது, பயம் அறிந்தேன், பதறிப்போனேன்...

உள்ளம் கண்ட உயரிய அதிர்ச்சி அது, என்னை வளர்த்த தாய், என்னை நேசித்த, மிகவும் நேசித்த ஒரே ஜீவன் என்னை பிரிந்துவிட்டாள் , தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள், என் வளர்ச்சியை காண இன்று அவள் இல்லை,எதை செய்தாலும் அவரிடம் சொல்லாமல் இருந்ததில்லை. இன்று அவரை பற்றி ஒரு கட்டுரையை எழுதும் அளவுக்கு செய்துவிட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது ஆனாலும் நான் வாசித்துப் புரியவைப்பேன் ஆனால் அவரை பற்றி எழுதி இன்று நான் இந்த வெண் காகிதத்தை நனைப்பேன் என கடைசிவரை நான் நினைத்ததில்லை. தனிமையின்  கொடுமையை உணர்ந்துவிட்டேன். அம்மா,அப்பா அன்புக்கு இலக்கணமானவர்கள், ஆனால் என் அம்மம்மா அவ்  இலக்கணம் எழுதிடும் மொழியனவர். நான் கவலையில் துடிப்பது எவருக்கும் தெரியாது, கூறி என்ன செய்வது என தெரியவில்லை. "இப்பொழுது மட்டும் ஏன் கூறினாய்?" என எதாவது ஒரு ஜீவன் கட்டாயம் கேட்கும். அவை ஏதாவது பிழைக் கண்டறிய வேண்டுமே.. என கேட்க எத்தணிப்பது.. அவற்றுக்கு நான் விளக்கிடத் தேவையில்லை, சோற்றுக்கு இடையே சிக்கிய கல் போன்றவர்கள் அவர்கள், தூக்கி எரிந்து விட வேண்டுமே தவிரச்  சாப்பிடக்கூடாது.

இதற்கு மேல் அவரை பற்றி அந்த பிரிவைப்பற்றி நான் எழுத விரும்பவில்லை, கண்ணீரின் அளவு அதிகரிப்பதை உணர்கிறேன். என் உயிரை கவலை எனும் கொடூரன் இறுக்குவதை உணர்கிறேன். தலைக்குள் ஏதோ வெடிப்பது போலத் தோன்றுகிறது,முடியவில்லை தொடர்ந்திட, முடித்துக்கொள்கிறேன். எழுத்து தொடரும்...

~அன்புடன் கோகுலன்.

Monday, November 5, 2012

வலை!


உன்னை நினைத்து உள்ளதை உருக வைத்தாய்,
 இருள் விலகினும் ஒளியின்றி திணர வைத்தாய்,
காரணமின்றி கானகத்தில் காக்க வைத்தாய்,
 விடையில்லா வினாக்களை விழிக்குள் வைத்தாய்...

வலக்கையை பிடித்து வழுக்கி வலைக்குள்ளே விழுந்தேன்,
 வலி கொண்டு துடித்து வழியின்றி தவித்தேன்...
கவலையின் கரையில் கரைந்து கறையானேன்,
 விளக்கமின்றி விரைந்தோடி இன்று விறைத்தொடுங்கினேன்...

உன் நியாயங்கள் என் காயங்கள் ஆற்றுமா?
 கண்ணீரில் தோய்ந்து தேய்ந்து அழியுமா?
என் காதலின் நிலைகண்டு கல்லறையும் அழைக்குமா?
 என் வேதனையின் திடம் கண்டு விண்ணும் கலங்கிடுமா?

காதலில் தோற்பவன் காதலை வெறுக்கிறான்,
 காதலில் வெல்பவன் காதலியிடம் தோற்கிறான்...
என் மங்கையின் மௌனத்தால் மனமும் மரணிக்குதே...
 போதையில் வீழ்ந்தழியும் பேதையாய் ஆக்குதே...

~அன்புடன் கோகுலன்.

Friday, November 2, 2012

முடிவா?


தேடியது காதலா? நெஞ்சங்களின் மோதலா?
பேசியது புரியவில்லை மனமே...
மாதரின் விழி கண்டு மடமைக்குள் மூழ்கினேன்,
ஏங்குகிறேன் உன்னை நினைத்து தினமே...

சதிகளின் சங்கமமிது சடலமாய் உடல் மாறுது,
மரணத்தின் வாசலில் இன்று மண்டியிட்டு கிடக்கின்றேன்...
நிமிடங்கள் முழுவதும் உன் நினைவுகளால் நிரம்புது,
மனதை கட்டுபடுத்த மதி வழியின்றி தடுமாறுது...

துன்பங்களும் வாழ்கையில் ஒரு பகுதி தான்,
என் வாழ்க்கையோ துன்பத்துள் ஒரு பகுதி தான்,
இன்பத்தால் சிரிக்கும் நேரம் கூட,
துன்பம் என்னை வந்து அணைக்கிறது...

காத்து கிடக்கும் சுகங்கள் இனி இல்லை,
ஏங்கி தவிக்கும் நாட்கள் இனி இல்லை,
ஒரு வார்த்தையில் நீ முடித்தாய்...
இன்று என் வாழ்கையே முடிந்து விட்டதே...

~அன்புடன் கோகுலன்.