Skip to main content

Posts

கத்தும் குழந்தையாய் மனமும்...

முத்துக்குள் முத்தங்கள் இடவும்,  திக்கித் திணறிடுதோ இதயம், தத்தித்  தாவித் தடுமாறித் தினமும்,  கத்தும் குழந்தையாய் கதறியே அழும், சிக்கிக் கொண்டு சிக்கல்கள் கூடும்,  தத்-தம் தருணம் திணறினால் மரணம்... பத்துக் கைவிரலும் பற்றிப் பிடிக்கும்,  சத்து இன்றி சதைதான் குறையும், சொத்து சுகம் தேடாத மனமும்,  கொத்துக் கொத்தாய் முள்ளையும் பறிக்கும், பித்துப் பிடித்து திரிய துவங்கும்,  கத்துக் குட்டியை கவலைகளும் சூழும்... நித்தம் கண்ட கனவுகள் மறையும்,  சத்தம் இன்றியே சந்தங்கள் அடங்கும், புத்தம் புதிதாய் பூத்திடும் ரோஜாவும் - என்  ரத்தம் கண்டு தலைதான் கவிழும், சித்தம் கொண்ட சித்தனாய் நானும் - இங்கு  புத்தனாய் மாறினால் வலிகளும் குறையும்... செத்துப் போகுதே மனமும் இன்று - ஏனடி என்னை  வித்தாப் பெற்றேன் உன்னிடம் காதலும் அன்று... முத்தா முடிவா மூழ்கியதால் அன்று - காதல் இனி  பத்தா(த) உண்டியாய் மாறிடும் நிலைதான் இன்று... ~அன்புடன் கோகுலன்.

அன்புள்ள மகனுக்கு, (தாயின் பார்வையில்)

கண்ணே நீ என் உயிர் தானே?  என் கண்ணுள் விம்பமாகி பதிந்த என் உணர்வு தானே? பொன்னே மணியே பூந்தேனே பூவரசே,  மலருள் ஒளிந்திருக்கும் அமுதே என் அரசே... என் கை தொட்டு, பிடித்து கட்டியணைத்து,  என் எச்சில் உன் கன்னம் நனைத்து, என் உணர்வுகளால் உன்னை பிணைத்து,  நான் சிரிக்க நீ மகிழ்வாயே என் நிலவே... மண்ணை நீ தொட வலிக்குது என் மனந்தான்,  வெயில் உன் தேகம் சுட எரியுது என் உடல்தான், கண்ணில் ஒருத் துளி நீர் கண்டு கலங்கிடும் என் இதயம் தான்,  குயில் இல்லை அன்பே காக்கையாய் வாழ்கிறேன் நான்... சேலையை நீ இழுத்திடும் கணங்கள் என்னை மறக்கிறேன்,  மார்பினில் உன்னை நான் சுமந்து தினம் உறங்கினேன், மொழிகள் அறியா உன் வார்த்தையில் உள்ளம் உறுகினேன்,  உனக்காய் தானே என் செல்லமே இன்று உயிர் வாழ்கிறேன்... ~அன்புடன் கோகுலன்.

மழலை மொழி பேசுமா?

பொன்னிற மேனி, அழகின் ராணி,  தொடுகையில் சிரித்திடும் சிரிப்பும் வகைகளில் தனி, கள்ளமில்லை கண்ணீரில் கலப்படமில்லை,  மொழியில்லை மழலைக்கு மொழியவதில்லை எல்லை... புயங்கள் நான்கும் மண்ணில் புதையும் போது,  காயங்கள் தினம் காணும் புவித்தாயும் சிலிர்க்கிறாள் இன்று, மாயங்கள் இல்லை அவர்களிடம் மர்மங்கள் இல்லை,  தாயங்கு கண்டு சிதறிடும் சிரிப்புக்கு ஏதடா விலை? காதல் கொண்டு காமத்தால் நின்று,  இரவினில் நடத்திய இன்ப ஆட்டத்தின் சான்று, பெண்ணும் ஆணும் பேதையாய் மாறி,  விதைத்து விட்ட விதையின் பத்தாம் மாத விளைவு... அழகுக்கு அளவில்லை, மழலை அழகை அளந்திட வழியுமில்லை,  விடலை பெண்ணிடம் கூட இவ்வழகு இவ்வளவுக்கில்லை... மழலையை தொட்டுக் கொஞ்ச என் மயிரிழை கூட,  தாண்டிட துடிக்குதடா புவியின் எல்லை... ~அன்புடன் கோகுலன்.

பெண்ணே மௌனமேன்?

மார்கழி மாத பனிக் கோட்டைக்குள், மங்கையவள் மனதுக்குள் சாரல், கோடை வெயிலில் - அவள், உடலுக்குள் பெய்திடும் தூறல், நித்திலங்கள் மேல் அவள் கூடல், கூட்டுதோ எமக்குள் இந்த ஊடல்... செந்தேனே  இரவின் வெண்ணிலவே, பட்டுக் காட்டில் பெற்றெடுத்தக் கட்டழகே, வந்தேனே வைகறைப் பெண்ணிலவே, தொட்டு மண்ணில் விட்டுப் போன முத்தழகே, நொந்தேனே உன்னாலே என்னிலவே, கட்டு மரத்தில் கட்டி விட்ட கள்ளழகே... சோலைகள் கண்டு கருகி - தவித்தேன் சேலை பெண்ணே ஏன்? மாலைகள் வண்டு மணிமகுடமோ, மலை பெண்ணே சொல்? பதில் கூறு பதற்றம் வேண்டாமடி, பதபதைத்து என்னை பிதற்ற வைக்காதடி, காதலே கண்ணின் திரைக்குள் - உன் விம்பம் கல்லறையான வித்தை விளங்கிடவில்லையடி... ~அன்புடன் கோகுலன்.

வரமாய் கிடைத்த சாபம்.

விலகிய அந்த நினைவுகளும் மனமே, தினம் இரவினில் கனவுகளாய் வருமே... எந்தன் எதிர்காலம் சுவையானது, காதல் இனித்திடும் புது கனியானது... மனதுக்குள் மாயமும் இங்கே, கண்ணுக்குள் இருந்த காயங்கள் எங்கே? இனி, இதழ்கள்  இணைத்ததும் நாவும் இனித்திடும், முதல் இன்றியே லாபம் நிலைத்திடும், திசைகள் எங்கிலும் உந்தன் விம்பங்களும், நிலையாய் தோன்றியே என் உயிரை அணைத்திடும்... என் உலகம் கூட, பிரபஞ்சங்கள் தாண்டி, புகலிடம் தேடியே, உன் இதய அறைக்குள் நுழையும்... காதல்! - வரமாய் கிடைத்த சாபமாய் மாறும்... ~அன்புடன் கோகுலன்.

கனவுக் காதலும் வாழ்கவே...

கண்ணே உன் கண்கள் கண்டு காதல் மலர்ந்தது மென்மையாய், பெண்ணே உன் மௌனத்தில் மொழிகள் தேடிடும் உள்ளமாய், முன்னே நீயும் நிற்கையில் பதைபதைக்கும் தேகமாய், மண்ணே ஆறடி நிலமும் அவளின்றேல் எனக்கு ஆகிடும் உண்மையாய்... ஆசைக் கூட்டி ஆட்டம் தொடங்க, பரமபதமும் தினம் அழைக்குமே... ஆசைக் காதலும் இன்றி தனிமையில், உள்ளம் மெலிவதை உடல் உணருமே... முதல் பார்வையில் உனக்குள்ளே ஈர்த்துக்கொண்டாய், குளிர் காலத்திலும் உடலை வியர்க்கச் செய்தாய், இதயத்தில் சிரங்காய் நீயும் இன்று மாறிவிட்டாய், சுரண்டிய வலிகளுடன் வாழ வழியமைத்தாய்... காரிருள் கானகத்துள் தொலைந்தக் குழந்தையைப் போலவே, காரிகையே கருங்கூந்தளுக்குள் ஒரு மலராய் நான் வாழவே, கானல் நீரை கரும் முகிலாய் மாற்றிடும் காதலே, காற்றிலே மறைந்து கண்களுக்குள் கரைந்த காதலும் வாழ்கவே... ~அன்புடன் கோகுலன்.

உனக்காக காத்திருப்பேன்...

கண்மூடி கனவை தொட்டு விளையாடு, மலை குருவியாய் மழைக்குள் குளித்துவிடு, செந்தேனே நீயும் மலரிடம் மௌனம் கற்றுவிடு, இசை மீட்டி தமிழையும் திசை எங்கும் பரப்பிவிடு... துள்ளி திரியும் காற்றே தாய் மொழியால் அழகாக்கிடவா? மின்னல் கொண்டு மாலை கோர்த்து உனக்கு சூடிடவா? கொடும் பனியில் என் இதயத்தை நானும் புதைத்திடவா? என் இதழ் கொண்டு உன் இதழ் தினம் நிதம் நனைத்திடவா? புல்மீது பூத்த பனித்துளியே, சூரியனாய் நானும் உன்னை எனக்குள் ஈர்க்கவா? புன்னைகையால் என்னை நீ சிதைக்கையில், இடைமீது நானும் கரம் கொண்டு விடைதேடவா? அந்தி நேர தென்றலில் ஆற்றங்கரை மணலில் உன் பாதம் தேடி அலையச் செய்தாய்... மனம் காதலுடன் கை குலுக்கி கவிதையால் பெயரெழுதி, காத்திருக்க இன்று நீ பழக்கி விட்டாய்... ~அன்புடன் கோகுலன்.